கண்டன போராட்டத்தில் குதிப்பு.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 3500 க்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி கச்சத்தீவிற்கும் நெடுந்திருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகும் அதிலிருந்து 7 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது .
இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட ஒரு விசைப் படகையும் 7 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும், இலங்கை அரசால் பரிந்துரை செய்யப்பட்ட படகுகளுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது, அதே போல் விடுபட்ட படகுகளுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், 2019 முதல் தற்போது வரை பிடிபட்டு இலங்கை வசம் இருக்கும் படகுகள் அனைத்தும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் , தங்கச்சிமடம் வலசை தெருவில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள் , மீனவர்கள், மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.