
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை(6) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-இந்திய மீனவர்கள் 15 பேர் இரண்டு படகில் நேற்று சனிக்கிழமை(5) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்,நேற்று சனிக்கிழமை(5) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,இன்று ஞாயிற்றுக்கிழமை(6) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
-தலைமன்னார் கடற்படையினர் குறித்த 15 இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன் போது திடீர் சுகயீனம் அடைந்த ராமமூர்த்தி குமார வடிவேல்(வயது-29) மற்றும் வினோத் கஜேந்திரன் (வயது 32) ஆகிய இரு மீனவர்களும் தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-ஏனைய 13 இந்திய மீனவர்களும் கடற்படையினரின் விசாரணைகளின் பின் இன்று மாலை 6 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளனர்.குறித்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.