தற்போது 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
இன்று இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முதல் காரணம் 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்து இனவாத கருத்துக்களோடு ஆட்சியாளர்கள் பயணித்ததன் காரணமாக இன்று இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.
1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது சிங்கள மக்கள் அதை எதிர்த்து தடுத்திருந்தால் இன்று சிங்கப்பூர் இலங்கையிடம் கடன் கேட்கின்ற நிலமைக்கு வளர்ந்திருக்கும்.ஆகவே அடிப்படை பிரச்சனை அங்கிருந்து தான் உருவாகியுள்ளது.
இப்படியான சூழலில் தற்போது இந்த பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஜனாதிபதி வரவு செலவு திட்டம் முன்மொழிந்தது மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு பொருத்தமாக அமையவில்லை.
இந்த வரவு செலவு திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கு நிதிகள் முன்மொழியப்பட்டு இருந்தாலும் இலங்கையின் வருமானம் அதில் சரியாக குறிக்கப்படவில்லை.
குறிப்பாக அங்கவீனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்த 5000ரூபா பணத்தைக் கூட 2500 ரூபாவாக குறைப்பதற்கு இந்த அரசு முயற்சித்து வருகிறது.
இதே போன்று பல அதிருப்தியான விடயங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.