Friday, May 16, 2025

மக்களின் நம்பிக்கை சீர்குலைவு ; பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்

பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடத்தைகள் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது என்று பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு மத்தியில் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண் பொலிஸார் இருவரை கழுத்தில் பிடித்துத் தள்ளுகின்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டதுடன், அப்பொலிஸ் அதிகாரியின் நடத்தை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இச்சம்பவம் குறித்தும் அமைதிப்போராட்டத்தை சட்டவிரோதமான முறையில் நிறுத்துவதற்கும், அதில் கலந்துகொண்டோரைக் கைதுசெய்வதற்கும் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி அவ்விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அவசியமான சில விபரங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறுகோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

களுத்துறையிலிருந்து ஆரம்பமான அமைதிப்போராட்டம் பாணந்துறையில்வைத்து பாணந்துறை பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இப்போராட்டத்தை இடைநிறுத்தியமைக்கான காரணம், யாருடைய உத்தரவின்பேரில் இடைநிறுத்தப்பட்டது, அந்த உத்தரவை செயற்படுத்தியது யார் என்ற விபரங்களை நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.

அதேபோன்று பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது உரியவாறான உத்தரவுகளைப் பிறப்பித்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பாதுகாப்பதற்கு அவர் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டது.

எனவே பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தவறியமைக்கான காரணத்தையும் நீங்கள் எமக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

மேலும் பொலிஸ் அதிகாரிகளின் தரப்பிலிருந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெளிவுபடுத்துங்கள். இவற்றை உறுதிப்பத்திரத்தின் வாயிலாக எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் எம்மிடம் கையளியுங்கள்.

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடவடிக்கைகள் ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது.

எனவே பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உங்களிடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles