1984 டிசம்பர் 4 ஆம் திகதி மன்னார் மாதோட்ட மக்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்!…
பாடசாலை மூன்றாம் தவணை விடுமுறை தொடங்கும் நாள், அந்நாள்!
மாணவர்களாகிய நாங்கள் ஆலய வயலில் நாற்றுப் பிடுங்கிக்கொண்டு நின்றோம்.

காலை 11 மணியிருக்கும்.உயிர்த்தராசன்குளத்துச் சந்திக்கு அருகாமையில் , கட்டுக்கரைக்குளத்திற்கு அருகில் — மன்னார்-கொழும்பு பிரதான வீதியில், இலங்கை இராணுவத்தைக் குறிவைத்து கண்ணிவெடி ஒன்று வெடித்தது.
இத்தாக்குதலில் ஓர் இராணுவ வீரர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, பிரதான வீதியின் இரண்டு பக்கமும் இராணுவ வாகனங்களில் கோபாவேசத்தில் சென்ற இராணுவம், காட்டுமிராண்டித் தனமாக வீதியால் சென்றவர்கள், வயலில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொண்டவர்கள், முருங்கன் அஞ்சல் அலுவலகத்தில் வேலைபார்த்துக்கொண்டு நின்ற அரச ஊழியர்கள், கடைத் தெரிவில் நின்றவர்கள் என கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுப் படுகொலை செய்தது.
ஒரு பேருந்தில் சென்ற பயணிகளையும் இறக்கி, அதில் பயணித்த அனைவரையும் வரிசையில் நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றது. இதில் தப்பிய சிலர் அப்படுகொலையைப் பற்றிப் பின்னர் பல பயங்கரமான அனுபவங்களைக் கூறியிருக்கின்றார்கள்.
காயமுற்று உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த சிலர், பலமணி நேரத்தின் பின் சில அருட்பணியாளர்கள், மருத்துவர்களின் உதவியோடு வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு இருக்கின்றார்கள்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் வயலிலும் வரப்பிலும் வீதியிலும் அப்படியே கிடந்து ஓரிரு நாள்களின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. நான்கு ஐந்து நாள்களின் பின், ஒருவரின் துர்நாற்றம் வீசும் உடலை எங்கள் வீட்டிற்கு முன்பாக உள்ள குளக்கட்டு வீதியில் ஓட்டமும் நடையுமாகச் சிலர் காவிக்கொண்டு சென்றதை நானே என் கண்களால் பார்த்தேன்.
இச்சங்காரத்தில் சுமார் 250 பேர் அளவில் பலியெடுக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இத்துயரச் சம்பவம் மன்னார் மாவட்டத்தையே உலுப்பியெடுத்த ஒரு பெரும் கொடூர நிகழ்வாகும். இச்சம்பவத்தின் பின் மன்னார் மாவட்டம் மீண்டெழப் பல ஆண்டுகள் ஆனது என்பதை அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவார்கள்.

இப்படுகொலை நிகழ்த்தப்பட்டு இன்று சரியாக முப்பத்தெட்டு (38) ஆண்டுகள்!
படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக, ஒரு நினைவுக் கல்கூட இல்லாதது பெரும் துயர், பெரும் வேதனை!
ஆனால், எம்மவர்கள், இதே மண்ணில் தங்கள் தங்கள் சமய அடையாளங்களைச் சந்திகளிலும், வழியோரங்களிலும் வைப்பதிலும் உடைப்பதிலும் காட்டும் உற்சாகத்தைப் பார்க்கின்றபோது ஐயகோ மனம் துடியாய்த் துடித்துப் புண்ணாகின்றது.
எங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டியில் எம்மவர் இருக்க, கொழும்பு அரசு தன் வேலையை தாராளமாகச் செய்து முடிப்பதில் தொடர்வெற்றியைக் காண்கின்றது.
என் சனமே! எப்போது நாங்கள் விழித்தெழப் போகின்றோமோ?

நன்றி:-செ. அன்புராசா