மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கோரிக்கை.
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் மீள் குடியேற்றப்படாத பலாலி வடக்கு மக்கள் இன்றைய தினம் (14) சனிக்கிழமை முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
-இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு சென்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


யாழ்ப்பாணம் வலி வடக்கு மக்கள் தமது காணி விடுவிப்பதற்காக நீண்ட காலம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போராடி வருகின்றனர்.சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட முகாம்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தமது காணியை விடுவிப்பதற்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
பல குழந்தைகளுக்கு தமது பூர்வீக காணியை அடையாளம் காண முடியாத, தமது பிறப்பிடம் தெரியாத நிலையில் உள்ளார்கள்.
அந்த மக்கள் பல வருடங்களாக மழை வெள்ளங்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக அகதி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
தொடர்ச்சியாக இன்று வரைக்கும் பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அந்த மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடமாகாணம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர இருப்பதாக அந்த மக்கள் அறிந்த நிலையில் தமது காணியை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அந்த மக்கள் உயர் பாதுகாப்பு வளையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளுக்கு முன்பாக அமர்ந்திருக்கிறார்கள்.
தமது காணியை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த மக்கள் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் இந்த போராட்டத்தை இன்று (14) சனிக்கிழமை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
நாளை (15) ஜனாதிபதியின் வருகையின் போதும் தமது கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளார்கள்.
தமது காணிகளில் யாரோ எல்லாம் வந்து விவசாயிகளை மேற்கொள்கின்றார்கள். ஆகவே நாங்கள் அவதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்த வருகிறார்கள்.
எனவே அந்த மக்களின் காணிகளை மக்களிடம் மீண்டும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அரசு இந்த மக்களையும் தன்னுடைய மக்களாக கருதிக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்று எண்ணி அந்த காணிகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அந்த மக்கள் தமது சொந்த காணிகளை விட்டு விட்டு சொந்த நாட்டிற்குள் சொந்த மாவட்டத்தில் அகதிகளாக வாழ்வதற்கு இந்த அரசு ஒருபோதும் இடம் அளிக்கக் கூடாது.அது இந்த அரசாங்கத்தின் வேலை அல்ல.
எனவே அந்த மக்கள் மீண்டும் தங்களுடைய சொந்தக் காணியில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இருக்கிறார்கள்.ஆகவே அந்த மக்களை அவர்களுடைய சொந்த காணிகள் குறித்து அவர்களுடைய பொருளாதாரம்,நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த இந்த அரசாங்கம் இந்த ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்த நிலையில் தனது காணிகளை மீட்டு எடுப்பதற்காகவே அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது குழந்தைகளுடனும், வயோதிபர்களையும் வைத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
எனவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ள ஜனாதிபதி இந்த மக்களின் போராட்டத்தை மதித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எனவே ‘தமிழ் பேசும் மக்களின் பொங்கல் பரிசாக’ ஜனாதிபதி இந்த மக்களின் காணிகளை விடுவித்து அந்த மக்களிடம் கையளிக்க வேண்டும் என்பதே அந்த மக்களின் கோரிக்கையும் விருப்பமாக உள்ளது.
எனவே இந்த மக்களின் பக்க பலமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் ஆகிய நாங்களும் இருக்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.