மன்னார்-யாழ் பிரதான வீதி,தள்ளாடி 14 கண் பாலத்தடியில் வாழ்வாதாரத்துக்காக நீண்ட காலங்களாக சிறு கடல் தொழில் செய்யும் மீனவர்களை ராணுவம் அப் பகுதியில் தொழில் செய்ய அனுமதிக்காததன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை (30) மாலை நேரடியாக சென்று மீனவர்களின் நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் வன்னி இராணுவ தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இப் பிரச்சனை தொடர்பாக தெரியப்படுத்தினார்.

உடனடியாக தள்ளாடி ராணுவ பொறுப்பு அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரை யாடியதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக அம் மீனவர்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் சிறு கடல் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இப் பாலத்தடியில் நாகதாழ்வு, பெரிய நாவற்குளம், மாந்தை மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டு சிறு கடற்றொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


