இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக் காக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வேலன் சுவாமிகள் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் (20) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த 7 பேரையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 8 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிராளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது