
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தச் சென்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடு படுபவர்களினால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை(13) காலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலகர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
-மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கடமையை உரிய முறையில் முன்னெடுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
மேலும் அரச உத்தியோக த்தர்களின் கடமைக்கு இடையூறு எற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இயற்கை வளங்கள் அழிவடைந்து, அழிக்கப்பட்டு வருகிறது.நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளது.மக்களும் எங்களுடன் இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமையை மேற்கொள்ளும் போது அதற்கான கௌரவத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.எனவே கடந்த 3ஆம் திகதி மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் இடம் பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தச் சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.