ஏப்ரல் பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிப்பதற்கான சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று (07) அனைத்து பிரதேசங்களுக்கும் 1,67,000 சுவாச பரிசோதனை கருவிகளை (ப்ரீத் அனலைசர்) விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை கடைபிடிப்பதுடன், தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த பண்டிகைக் காலத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் வகையில் நாடு முழுவதும் பல சாலைத் தடுப்புகள் அமைக்கப்படும், எனவும், இந்த காலப்பகுதியில் பொலிஸார் இரவு பகலாக நடமாடும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதோடு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோதனைச் சாவடிகளையும் அமைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.