‘நாட்டுக்கு மூச்சு தரும் உதயம்’ எனும் தொனிப்பொருளில் கீழ் மாவட்ட ரீதியாக பழ மரக்கன்றுகள் நடுகை நிகழ்ச்சித்திட்டம் நேற்று வியாழக்கிழமை (20) மாலை மன்னார் மாந்தை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.
விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் இணைந்து புத்தாண்டை முன்னிட்டு குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை(20) மாலை 5 மணியளவில் மன்னார் மாந்தை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாந்தை கமநல சேவைகள் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடுகை இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர்,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர்,உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.