வவுனியா மடுக் கந்த பகுதியில் வியாழக்கிழமை (25) யானைக்குட்டி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த நிலையில் அதனை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கிணற்றினுள் யானைக்குட்டி ஒன்று தவறி வீழ்ந்தமையை அவதானித்த கிராமவாசிகள் இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதேவேளை குறித்த குட்டியின் தாய் யானை அந்த பகுதியில் உலாவித்திரிவதால் மீட்பு பணியில் தொய்வு நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.