நலன்புரி நன்மைகள் சபையினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் உள்வாங்கப்படாத பயனாளிகள் நேற்றைய தினம் புதன்கிழமை மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் பணம் வசதி உடைய மற்றும் மாடி வீடுகளில் வசிப்பவர்களும் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,சிறு நீரக நோயாளிகள் உட்பட பலரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பட்டியல் பொருத்தமற்றது என தெரிவித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் மன்னார் நகர் பிரதேச செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் புதிய நடைமுறை தொடர்பிலும் தெளிவுபடுத்திதிருந்தார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கோரிக்கை தொடர்பில் தாங்கள் பரீசிலிப்பதாகவும் பட்டியலில் விடுபட்டு சமூர்த்தி பொறுவதற்கான தகுதியுடைய நபர்கள் மேன் முறையீட்டை மேற்கொள்ளுமாறும்,சமூர்த்தி பட்டியலில் பெயர் குறிப்பிட்டுள்ள நபர்கள் இருப்பின் அவர்கள் தொடர்பிலும் முறைப்பாடு வழங்கும் படி மன்னார் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.