மலையக எழுச்சி பயணம் நேற்று(30.07.2023) மன்னாரை வந்தடைந்துள்ளது. இதன் போது மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் இணைந்து வரவேற்றனர்.
மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவு கூறும் வகையிலும்,மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளில் ‘மலையக எழுச்சிப் பயணம்’ என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடை பயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பு நடைபெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான நேற்று(29)காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், காலை 11 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்துள்ளது.
மலையக மக்கள்,மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்களின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை அத் தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து வழிபாடுகள் இடம்பெற்றன.
நாளை திங்கட்கிழமை (31) காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து நான்காவது நாள் பயணமாக முருங்கன் நோக்கி பயணிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.