மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஓ.எம்.பி) தொடர்ந்தும் அவர்களின் உறவுகளை அழைத்து அலைய விட்டு வேடிக்கை பார்ப்பதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (08.08.2023) காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஓ.எம்.பி) எங்களுக்கு தேவை இல்லை என்று ஆரம்பத்தில் கூறி வந்தோம். எனும் குறித்த அலுவலகத்தை கொண்டு வந்து விட்டார்கள் என்பதற்காக நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் விவரங்கள் ஓ.எம்.பி அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்டோம்.
ஆனால் பதிவுகளை மேற்கொண்டும் எவ்வித நன்மையும் இல்லை. உயிர்களை உறவுகளையும் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றனர் அம்மாக்கள். ஆனால் ஓ.எம்.பி அலுவலகத்தினால் கடிதத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு எந்தவித கடிதமும் தேவை இல்லை என ஓ.எம்.பி அதிகாரிகளிடம் தெரிவித்து கொள்கிறேன்.
எங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளே வேண்டும். இந்த நிலையில் தொடர்ந்தும் எங்களுக்கு கடிதங்களை அனுப்பி எங்களை குழப்பத்திற்கு உள்ளாக்குகிறார்கள். அலுவலகர்களாகிய நீங்கள் அரசாங்கத்திடம் சம்பளம் வேண்டி வேலை செய்கின்றீர்கள். எங்களுக்கு இனி எந்த கடிதத்தையும் அனுப்பாதீர்கள்.
இக்கடிதத்தினால் எங்களுக்கு எவ்வித நன்மைகளும் இல்லை. நாங்கள் கடிதம் வேண்டாம் என்று சொல்கின்றோம். பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வரும் அம்மாக்களை அழைத்து அவர்களை அலைய விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நாங்கள் ஓ.எம்.பியை நம்பி பதியவில்லை. உங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 5 பேருடைய விவரங்களை உங்களிடம் சமர்ப்பித்தோம். ஆனால் அதற்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மன்னாரை சேர்ந்த அம்மா ஒருவர் அண்மையில் மரணித்துள்ள நிலையில் அவருடைய பெயரில் ஓ.எம்.பி. அலுவலகத்தினால் விசாரணைக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஏன் எங்களுக்கு தொடர்ந்து கடிதத்தை அனுப்பி தொலைபேசி அழைப்பை எடுத்து துன்பப்படுத்துகிறார்கள்? எனவே தொடர்ந்தும் எங்களை இவ்வாறு மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் முன்னெடுக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.