
தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
உண்மையிலேயே இந்த நாட்டில் நீதித்துறை நேர்மையான முறையாக இருந்ததா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவருடைய கருத்துக்களை பார்க்கின்ற போது சட்டமா அதிபர் கூட இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்ற செய்தி அதில் அறியக்கூடியதாக உள்ளது. நீதித்துறை எங்கே செல்கிறது? தமிழர்களுடைய பக்கம் அது தீர்ப்பு என்பது ஒரு நடுநிலையானது.
அவர் தமிழ் பிரதேசத்தில் இருந்து கொண்டிருக்கிறார். ஒருவர் நியாயமான தீர்ப்பை வழங்குகின்ற ஒரு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையிலே இனவாதமாகவும்,அவர் ஒரு தமிழராகவும் பார்க்கப்படுகின்ற நிலை காரணமாக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
நீதித்துறை என்பது நியாயமான வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது. மக்கள் நீதித்துறையை நம்பித்தான் இன்றைக்கு நீதிமன்றத்திற்கு சொல்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலையை பார்க்கும் போது தமிழ் நீதிபதிகளுக்கு அவர்கள் நியாயமாக செயல்படுகின்ற வாய்ப்பை தடுக்கின்ற அவர்களை அச்சுறுத்துகின்ற ஒரு செயல்பாடாக தான் இந்த நீதிபதியின் ராஜினாமா செய்தி கூறுகிறது.
ஆகவே தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது.ஆகவே நீதித்துறைக்கு விட்ட சவாலாக அமைந்துள்ளது.
ஆவே நிதியமைச்சர் இந்த விஷயத்தை ஆராய்ந்து இது உண்மையாக அதாவது அவருடைய ராஜீனாமாவில் அழுத்தம் உயிர் அச்சுறுத்தல் இருக்குமாக இருந்தால் நீதி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஏனென்றால் அவர் அமைச்சராக இருக்கும் போது ஒரு நீதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.எனவே இச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள இருக்கிறோம்.
சில வேளைகளில் எல்லா எங்களுடைய எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இதில் உள்ளடக்கி என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆராய்ந்து நிச்சயமாக நீதித்துறைக்கு விடுக்கப் பட்டிருக்கின்ற இந்த சவாலை முறியடிக்க வேண்டும்.
அதற்காகவே இத்தனை அச்சுறுத்தல்களும்.புத்த பிக்குகள் நீதித்துறையை மதிப்பதில்லை என்பது இந்த விடையத்திலே பார்க்கக் கூடியதாக உள்ளது.
இதில் குறுந்தூர் மலை தீர்ப்பு என்பது பல அழுத்தங்களை கொடுக்கும் வகையில் நீதிபதி அவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.