Tuesday, May 13, 2025

அபிவிருத்தி எனும் பெயரில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப் படுவதையும் அனுமதிக்க முடியாது-மன்னார் மறைமாவட்ட ஆயர்

அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப் படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் கறிராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இன்று திங்கட்கிழமை (09) காலை 11 மணியளவில் மன்னார் வாழ்வுதயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,

கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனமானது ‘இயற்கை வளங்களை பாதுகாப்போம்’ எனும் திட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி  வருகின்றது. இக்காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தின் இயற்கை வள சுரண்டல்கள், இயற்கை வள அழிப்புகள் பல அதிகாரிகளின் கவனத்திற்கும் துரித செயற்பாடுகளுக்கும் கொண்டுவருவதோடு மக்களுக்கு இதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் உள்ளதை உணர்ந்த படியினாலேயே இந்த ஊடகச் சந்திப்பானது உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை யும், அழிக்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது.

இப் பூமியானது நாம் அனைவரும் வாழ்வதற்கான பொது இல்லம். ஆகவே நாம் எமது முன்னோரிடமிருந்து எவ்வாறு வளத்தோடும். செழிப்போடும் இந்த இயற்கை வளங்களைப் பெற்றுக் கொண்டோமோ இவ்வாறு நமது நாளைய தலை முறையிடம் கையளிக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது.

  இதனால் குறிப்பிட்ட நபர்கள் இதை அபகரிப்பதும், அழிப்பதும் குற்றமாகும்.

மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தலான முக்கிய விடயங்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கனியவள அகழ்வு, காற்றாலை திட்டம், சட்டவிரோத மண் அகழ்வு இந்திய இழுவைப் படகுகளில் அத்து மீறிய நுழைவு, காடழிப்பு, கடலோர கண்டல் தாவரங்கள் அழிப்பு,வனவிலங்குகள் சரணாலயத்திற்கு சொந்தமான காணிகள் தனி நபர்களினால் அபகரிக்கப்படுதல் என்பனவாகும்.

இவற்றினால் நாம் எதிர்நோக்கும் பாரிய விளைவுகள், பேரழிவுகள் பற்றி மக்கள் தெளிவடைய வேண்டும்.சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புடைய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வினையமாக கேட்டுக்கொள்கிறோம். அதேவேளை, தொண்டு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், இயற்கைவள பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும், இயற்கைவள சட்டவாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றுவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

இயற்கையைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும்  அனைத்து நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பு இருக்குமென கூறிக்கொள்கிறோம். என தெரிவித்தார்.

இதேவேளை கருத்து தெரிவித்த -மன்னார் கறிராஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார்

சர்வதேச சமூகம் இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் காலநிலை மாற்றங்களை நிர்வகிப்பது குறித்து தனது தீவிர அக்கறையைக் காட்டும் இக்காலப் பகுதியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் அவசிய மென உணர்ந்து செடேக் நிறுவனமானது மிசறியோ நிதியுதவியைப் பெற்று மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும்  செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதியுதவியினை 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்காக வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனம் ‘இயற்கை வளங்களை பாதுகாப்போம்’ எனும் திட்டத்தை மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், வனஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் அதிகார சபை, நகர சபை, வனவள திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிராமங்களில் (கீரி, சவுத் பார், காத்தான்குளம், பாலப்பெருமாள்கட்டு, முசலி வேப்பங்குளம், மடுக்கரை, தம்பனைக்குளம், பன்னவெட்டுவான், மடுறோட்) அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் முக்கிய செயற்பாடுகள்: இயற்கை வளங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் சமூகத்தின் பங்கேற்பையும், ஈடுபாட்டையும், நிலைத்த தன்மையையும் உறுதி செய்யும் நோக்குடன் ஒவ்வொரு இலக்கு கிராமங்களிலும் சிறுவர், இளையோர், வளர்ந்தோர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மரம்நடுகை, மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தமர்வுகள், சுற்றுச்சூழல் துப்பரவுப் பணிகள், கழிவு முகாமைத்துவ பயிற்சிகள், இயற்கைப் பசளை தயாரிப்பு, பாரம்பரிய விதை உற்பத்தி, இயற்கை வள களப் பயணங்கள், ஊடகப்பயன்பாடு, குடிநீர் கிணறுகள் புனரமைப்பு, மாணவர்களுக்கான சுத்திகரிப்பு நீர் வழங்கல், பாடசாலை மட்டத்திலான சுகாதார நடவடிக்கைகள், இயற்கை மேம்பாட்டு சித்திரப் போட்டிகள், வனஜீவராசிகள் பாதுகாப்பு பதாதைகள் எனப் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்த ஆண்டும் தொடரப்படும் இயற்கைவள செயற் திட்டங்களுக்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பையும், மக்களின் முழுமையான பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles