Tuesday, May 13, 2025

ஜனாதிபதி  தமிழ் இனத்திற்கு உதவி செய்வதாக இருந்தால் முதலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்- மனுவல் உதயச்சந்திரா

 விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இராணுவத்தை காப்பாற்றுவதற்காகவே இந்த நஷ்டஈட்டை வாழங்க முயற்சிக்கின்றீர்கள் என கருதுகிறோம்.என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

-மன்னாரில் இன்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணாமல் போன உறவுகளுக்காக மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

-எங்கள் உறவுகள் காணாமல் போனவர்கள் இல்லை.அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.மன்னார் மாவட்டம் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.எமது பிள்ளைகள் உறவுகளை விசாரணைக்காக பிடித்துக்கொண்டு சென்றவர்களே தற்போது காணாமல் ஆக்கப் பட்டுள்ளனர்.

அந்த பிள்ளைகளை தேடியே நாங்கள் இன்று வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.இராணுவத்திடம் கையளித்த,வீடுகளில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட உறவுகள் என அவர்களிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகிறோம்.

காணாமல் போன உறவுகளுக்கு அரசு உதவிகளை செய்யட்டும்.நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வே போராடி வருகிறோம்.

எனவே பாராளுமன்றத்தில் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாக விளங்க கூடிய வகையில் எடுத்துக் கூற வேண்டும்.ஜனாதிபதிக்கு தமிழ் தெரியாத நிலையில் எமது போராட்டம் குறித்து ஒன்றும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிகிறோம்.எனவே எமது பிரச்சினையை அவருக்கு தெளிவாக தெரிவியுங்கள் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி வருகிறோம் என்று.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை விவரம் எமக்கு தேவை.பிடித்துச் செல்லப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது? என்ற உண்மையை அரசு கண்டறிய வேண்டும்.அதன் பின்னர் நீதியை வழங்குங்கள்.அதன் பின்னர் நஷ்ட ஈடு தொடர்பாக கதையுங்கள்.

இதுவரை நாங்கள் உங்களிடம் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நஷ்டஈட்டை கேட்கவில்லை.வாழ்வாதாரமும் கேட்கவில்லை.காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று நீதிக்காக வே கேட்கின்றோம்.
அவர்கள் இருக்கின்றார் களா? அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள போராடி வருகின்றனர்.

-காணாமல் போன இராணுவம் அல்லது சிங்கள மக்களுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள்.தமிழ் இனத்திற்கு உதவி செய்வதாக இருந்தால் முதலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள்.உங்களிடமே எமது உறவுகளை கையளித்தோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக சுமார் 14 வருடங்களாக அம்மாக்கள் வலி சுமந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.எனவே முதலில் உண்மையை கண்டறிய வேண்டும்.அதன் பின்னர் நிதியை வழங்குவதா அல்லது நஷ்டஈட்டை வழங்குவதா என்று முடிவு செய்யுங்கள்.

விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இராணுவத்தை காப்பாற்றுவதற்காகவே இந்த நஷ்டஈட்டை வாழங்க முயற்சிக்கின்றீர்கள் என கருதுகிறோம்.எனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles