(2 ஆம் இணைப்பு)
சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதான பாலத்தடி யில் முன்னாள் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ சமூக செயற்பாட்டாளர் பெனடிற், மன்னார் நகரசபையின் முன்னாள் உப தலைவர் ஜான்சன், மன்னார் நகரசபை முன்னாள் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோர் நினைவு சுடரை ஏற்றி நினைவஞ்சலியை ஆரம்பித்து வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள்,வர்த்தகர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மெசிடோ நிறுவன ஊழியர்கள் இணைந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
(((1 ஆம் இணைப்பு.)))
சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு நாள் இன்று (26) மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த தேசிய பாதுகாப்பு தினத்தின் நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 9 மணியளவில் மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,சர்வமத தலைவர்கள்,திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.

நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை அனர்த்ததினால் இலங்கையில் பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது.அந்த சுனாமி அலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
