தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று வியாழன் (28) காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி என தெரியவந்துள்ளது.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது இல்லத்தில் கடந்த 26 ஆம் திகதி இரவு தனது வேலையை முடித்த நிலையில் உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
உறக்கத்திற்கு சென்ற நிலையில் வியாழக்கிழமை காலை குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கடந்த இரண்டு நாட்கள் காணாத நிலையில் உயிரிழந்த நபரின் நண்பர் ஒருவர் காலை அவரை அவரது இல்லத்தில் தேடிச் சென்ற நிலையில் மழை வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.உடனடியாக குறித்த நபர் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தலைமன்னார் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.அவரது சடலம் தண்ணீரில் இருந்து மீட்டு வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டது.குறித்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸ் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனைவி பிள்ளைகள் மழை வெள்ளம் காரணமாக அருகாமையில் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இவர் தனது இல்லத்தில் உறங்கச் சென்ற நிலையில் இன்றைய தினம்(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.