வெடுக்குநாறிஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று சைவ சமய மக்களின் வழிபாட்டு உரிமைகள் புனித தன்மைகள் மீறப்பட்டமையினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மதத்தின் பெயரால் மனிதம் செத்து விடக் கூடாது என மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் கலாநிதிசிவஸ்ரீ மஹா தர்மகுமாரக் குருக்கள் தெரிவித்தார்.

வெடுக்கு நாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவ சமய மக்களின் வழிபாட்டு உரிமைகள் புனித தன்மைகள் மீறப்பட்டமையினை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,
வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டு மொத்த இந்து சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

சைவ சமயத்தின் புனிததன்மையினை சீரழிக்கும் இந்த செயல்கள் மிகப் பாரதூரமானவை இச்செயல் சைவத்தமிழர்களின் மனதை மிகவும் காயப்படுத்தியுள்ளன.
இச் செயற்பாடு அடிப்படை வழிபாட்டுஉரிமை மீறும் செயற்பாடு
என்பதை சைவ உலகிற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும்.உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் மஹா சிவராத்திரி ஆகும்.

யுத்தம் முடிந்து சர்வமதங்களும் இப்போது தான் புரிந்துனர்வுடன் ஒன்றாக இணைந்து பயனிக்கும் வேளையில் மீண்டும் ஒரு பிளவினை உருவாக்கியிருக்கும் இச் செயல் மத நல்லினக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
அந்த வகையில் இந்த சிவராத்திரி தினத்தில் தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற மோசமான சம்பங்களை அராஜகங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
