இலங்கை கடலுக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 32 பேர் மன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்றிரவு(20) யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
அவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, மன்னாரில் 2 படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வர பட்டுள்ளதுடன், நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 23 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.