இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என மட்டு.ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உண்டு என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் கடந்த இருபது வருடங்களாக படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக் காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் 26 ஊடக வியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
1985ம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படு கொலைகள் 2010ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும் பங்குடன் முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசாங்கம் இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்த போதும் அதன் குற்றவாளிகள் கூட கைது செய்யப்படவில்லை.அத்தோடு இந்த நாட்டில் பெருந்தொகையாக படுகொலை கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை இன்றுவரை ஆரம்பிக்கவில்லை.
இந்நிலையில் மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் 20 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடம் மேற்படி கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
1. இலங்கையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்ட வேண்டும்.
2. இலங்கையில் இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட காணாமல்போன ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும்.
3. இலங்கையில் தொடரும் மறைமுகமான ஊடக அடக்கு முறையை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
4. மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்க வேண்டும். உள்ளிட்ட எமது கோரிக்கைகளை சர்வதேச தேச அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமன் என்ற அடிப்படையில் 20 வருடங்களுக்கு பின்னரும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வை நடாத்துகின்றது.
நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது டன் இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், பொது அமைப்புகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.