வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை மற்றும் வீட்டு தள பாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தை அடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் தீ விபத்தில் தொழிற்சாலை முழுமையாக எரிந்து சாம்பலாகி உள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியது.இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
