வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்’ மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை(17) காலை இரு பிரிவுகளாக மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
நாடு முழுவதும் உள்ள வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் மன்னார் மற்றும் மடு ஆகிய இரு கல்வி வலயங்களையும் உள்ளடக்கி 830 மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப் பட்டனர்.
மன்னார் கல்வி வலயத்தில் 428 மாணவர்களும் மடு கல்வி வலயத்தில் 402 மாணவர்களும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதி புலமைப்பரிசில் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ,மன்னார்,மடு வலய கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.