நாங்கள் மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். எல்லாத்துறையிலும் வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும் : அநுர குமார திசாநாயக்க என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்தின் மாத்தறை மாவட்ட கருத்தரங்கு கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்தறை பர்ள் பெலஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இங்கு மேலும் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க,
நாங்கள் நீண்ட காலமாக வாக்குகளை அளித்திருக்கிறோம். வாக்குகளை அளிக்கும்போது அரசாங்கமொன்றை அமைக்கும்போது பிரஜைகளிடம் நிலவிய எதிர்பார்ப்புகள் ஈடேறியுள்ளனவா? எமது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியை நோக்கினாலும், அரச மற்றும் ஏனைய ஒவ்வொரு துறையிலும் தோன்றியுள்ள சீர்குலைவுகளை நோக்கினாலும் நிகழ்ந்திருப்பது முன்னேற்றமல்ல. பின்னடைவுதான்.
நாங்கள் இந்த தலைவிதியிலிருந்து மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தது 1970 இல். 54 வருடங்களாக பாராளுமன்றத்தில். ரணில் வந்தது 1977 இல். 47 வருடங்கள் பாராளுமன்றத்தில். தினேஷ் வந்தது 1983 இல். 41 வருடங்கள் பாராளுமன்றத்தில். பாராளுமன்றத்தில் உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள். அவர்களை மேலும் பரீட்சித்து பார்க்கவேண்டியதில்லை. நாங்கள் பல தசாப்தங்களாக அந்த மூடைகளை அவிழ்த்துப் பார்த்திருக்கிறோம்
. நாங்கள் அந்த வழமையான அரசியல் பாசறையிலிருந்து நவீன அரசியல் இயக்கமொன்றின் கையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாகியிருக்கிறது.