Tuesday, May 20, 2025

தமிழ் மக்களுடைய அரசியல் பயணம் பின்னோக்கிய நிலையில் உள்ளது- வடக்கு – கிழக்கு சார்ந்த பொது வேட்பாளர் விடயம் தேவையற்றது : எமில்காந்தன்

 நாட்டின் உண்மையான பொது வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான். வடக்கு – கிழக்கு சார்ந்த பொது வேட்பாளர் தமிழ் மக்களை தோல்விப் பாதையில் கொண்டு செல்லும் என ஐக்கிய மக்கள் கட்சி கூட்டணியின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் டிலான் அலஸினுடைய ஐக்கிய மக்கள் கட்சியின் ஊடாக பல சிதறிய கட்சிகளையும் சேர்ந்து வன்னி, நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம்.தற்போது தமிழ் மக்களுடைய அரசியல் பயணம் பின்னோக்கிய நிலையில் உள்ளது. பாரம்பரிய அரசியல் கட்சிகளை கொண்ட தமிழ் மக்கள் தற்போது எந்தக் கட்சி, யாரை ஆதரிப்பது என்ற நிலையில் உள்ளனர்.

எங்களுடைய மக்களுக்கு காத்திரமான ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் பல வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒரு பொது வேட்பாளராக களம் இறங்குகிறார். இந்த நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை காரணமாக அவர் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் அவர் பெரியதொரு பொறுப்பை எடுத்து இந்த நாட்டை மீட்டுள்ளார். அந்த அடிப்படையில் என் சார்ந்த கட்சிகளுடைய ஆதரவும், ஐக்கிய மக்கள் கட்சியின் ஆதரவும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தான்.ரணில் விக்ரமசிங்கவை தான் ஆதரிப்போம். நாட்டின் பொருளாதாரம், கட்டமைப்பு, சவாலான நேரத்தில் நாட்டை வழிநடத்தியவர். அரசியலில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட ஒருவராக உள்ளார்.

இதனால் தற்போதைய ஜனாதிபதி யை தான் நாம் ஆதரிக்க வேண்டும். அவர் தான் இந்த நாட்டின் உண்மையான பொது வேட்பாளர். இந்த நேரத்தில் தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலை எப்படி பார்க்க வேண்டும் என்ற செயற்திட்டங்களை செய்ய தீர்மானித்துள்ளோம்.வடக்கு – கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர் என்று ஒரு விடயத்தை பேசு பொருளாக்கி அதற்கு ஒரு வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் பொது வேட்பாளரை நிறுத்துவார்களாக இருந்தால் அது தமிழ் மக்களை தோல்விப் பாதையில் கொண்டு செல்லும். அவர்கள் பிழையாக மக்களை வழி நடத்துகிறார்கள் என்று தான் அர்த்தம்.

வடக்கு – கிழக்கை மட்டும் வைத்து வேட்பாளரை நிறுத்துவார்களாக இருந்தால் அது வெல்லப்போதில்லை. அதை தெரிந்திருந்தும் அரசியல் கட்சிகள் தமது கடமையை விட்டு தவறாக வழிநடத்துகிறார்கள்.அரசியல் கட்சிகள் மக்களை சரியான வழியில் வழி நடத்த வேண்டும். காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் என்பது தொடர்ந்து பேசப்பட்டு கொண்டு இருக்கிறது. தொடர்ந்து அதே விடயத்தை பேசிக் கொண்டிருக்க முடியாது.

அதனை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் உண்டு.அது பற்றி பேசுவதை விடுத்து தற்போதைய நாட்டு மக்களும், எதிர்கால சந்ததியும் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் ஒரே தெரிவு தற்போதைய ஜனாதிபதி ரணில் தான் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles