தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடை முறைப் படுத்தப்படுகின்ற” யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்” இன்றைய தினம்(02) திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வைபவ ரீதியாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ், ஜனாதிபதி பணிக் குழாமின் பிரதாணி சாகல ரத்நாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தாகியோ கொனிஷி உள்ளிட்ட வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொது முகாமையாளர், உத்தியோகத்தர்கள், சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் ஆலை இத்திட்டமானது 266 மில்லியன் அமெரிக்க டொலர் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இத் திட்டத்தினூடாக 300,000 மக்களுக்கு பாதுகாப்பான குடி நீரை வழங்குவதும், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நகரில் 80 ஆயிரம் பயணாளிகளுக்கான சுகாதாரத்தை மேம் படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இது சமவெளி பிரதேசமான யாழ்ப்பாணம், குடிநீர் விநியோகத்திற்காக நிலத்தடி நீரிலே பிரதானமாகத் தங்கியுள்ளது.எனினும், அதிக அளவு நீர் இறைத்தல், விவசாய இரசாயனப் பாவனை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் குறித்த நிலத்தடி நீர் மாசுபடுகிறது.

தேசிய மட்டத்திலான சராசரி நீர் வழங்கலின் உள்ளடக்குகையான 48% உடன் ஒப்பிடும்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்பான நீர் வழங்கல் 5% ஆக உள்ளது. மேற்கூறிய உண்மைகளை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரைச் சுத்திகரிக்கும் உப்பு நீக்கும் ஆலை யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




