இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பினுல் வருவதை தடுக்க அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கின்றோம்.கடற்படைக்கும் அழுத்தத்தை கொடுக்கின்றோம். எனினும் அவர்களின் அத்து மீறிய வருகையை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இவ்விடயத்தில் தமிழக அரசு அசமந்த போக்குடன் செயற்படுகின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(9) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகிறோம்.நேற்றைய தினம் வியாழக்கிழமை 4 படகுகளில் 35 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மன்னார் தெற்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக முன் வைக்கின்ற கோரிக்கைகளை உதாசீனம் செய்கின்ற வகையில் இந்திய மீனவர்களின் அத்த மீறிய நடவடிக்கையும் அதனால் கைதும் இடம் பெறுகின்றது.
குறிப்பாக வடபகுதி கடற்பரப்பில் இவ்வாறான அத்துமீறலும்,தடை செய்யப்பட்ட தொழில் முறைகளையும் செய்யாதீர்கள்.தற்காலத்திற்கு அதை நிறுத்தி வையுங்கள்.நாங்கள் உங்களுடன் பேச விரும்புகின்றோம்.
அதற்கு முன்னர் கலந்துரையாடல் ஒன்றை மேற் கொள்ளுவோம் என்று நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தாலும்,அக்கோரிக்கையை இந்திய மீனவர்கள் உதாசீனம் செய்து வருகின்றனர்.
குறித்த மீனவர்கள் மன்னார் தெற்கு கடல் பகுதியில் தொழிலில் ஈடுபட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியை இந்திய ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் அவர்கள் ஏற்றுக் கொண்ட வரலாறு இல்லை.தற்போது அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் மன்னார் கடற்பரப்பினுல் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழில் முறைமையையும்,இவ்வாறு உள் நுழைகின்றமையையும் இவர்கள் நிறுத்திக் கொள்வதற்கு நாங்கள் எத்தனையோ நடவடிக்கைகளை முன் னெடுத்தோம்.
அரசிற்கு அழுத்தத்தை கொடுக்கின்றோம்.கடற்படைக்கும் அழுத்தத்தை கொடுக்கின்றோம்.எனினும் அவர்களின் அத்து மீறிய வருகையை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.இவ்விடயத்தில் தமிழக அரசு அசமந்த போக்குடன் செயற்படுகின்றது.