மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் ஏதாவது தவறுகள் இடம் பெற்றிருந்தால் சம்பந்தப் பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,
மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த மரணம் குறித்து துரித விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதன்போது எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன,
இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விசாரணை அறிக்கையை இதுவரை ஆராயவில்லை.
குறித்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அது தொடர்பில் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை நாட்டில் நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே புதிய சட்டமூலமொன்றையும் முன்வைத்துள்ளோம் என்றார்.