Monday, May 19, 2025

எட்டாம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்; பேருந்து நடத்துனர் உட்பட ஐவர் கைது!

எட்டாம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவி இரண்டு ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேரூந்து நடத்துனர் ஒருவரும், தியகம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பேரும், குறித்த மாணவியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் மாணவி, நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வருவதும், வீட்டின் வறுமை காரணமாக, பணம் மற்றும் பிற பொருட்களை கொடுத்து ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாக மாணவி பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தனியார் பேருந்து நடத்துனர் மாணவியை ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் மாணவியிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் மாணவியை நடத்துனர் கடத்திச் செல்வதற்கு முன்னர் குறித்த மாணவி பல வருடங்களாக பல்வேறு நபர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

பிரதேசத்திலும், வீட்டிற்கு அருகாமையிலும் உள்ள இடங்களில் குறித்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles