மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரியராஜ் சிந்துஜா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாகக் கடந்த மாதம் 28ஆம் திகதி
மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏற்கனவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல உத்தியோகத்தர்களுக்கும் மாகாண சுகாதார அமைச்சினால் பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின்
மரணம் தொடர்பில் இன்றைய தினமும்
மத்திய சுகாதாரஅமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார்
மாவட்ட பொது வைத்தியசாலைக்குச்
சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.