Monday, May 19, 2025

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயக் கொடியேற்றம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகக் கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை (04) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாகிய அற்புத திருத்தலமாகவும், தானாகத் தோற்றம் பெற்ற ஆலயமாகவும், கிழக்கு மாகாணத்தில் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இம் மஹோற்சவம் ஆரம்பமானது.

மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினைச் சூழ வலம் வந்து கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் அரோகரா ஓசையுடன் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதனையடுத்து தம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன், பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம்வரும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிலையில் ஆலய தேரோட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், 23ம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles