அன்று ஓடி ஒளிந்து விட்டு இன்று ஆட்சியை கோரும் அநுர குமார வையும் சஜித்தையும் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். நாம் அளிக்கும் புள்ளடி தான் அதற்கான ஒரே வழி என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறை யில் நேற்று (14) ரணிலால் இயலும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாம் நன்றி மறந்தவர்கள் அல்லர். பால்மாவுக்கும், பணத்துக்கும் மண்ணெண்ணெய்க்கு வீதி வீதியாக வரிசையில் நின்றதை மறக்க வேண்டாம்.
அநுரகுமாரவைப் போன்று பேருந்துகளில் சனத்தைச் சேர்க்கும் கூட்டமல்ல இது. ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைப்பதற்கான உண்மையான நன்றிக்கடனுள்ள கூட்டம் இது.
அன்று ஓடி ஓளிந்து விட்டு இன்று ஆட்சியைக் கோரும் அநுரகுமாரவையும் சஜித்தையும் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.
நாம் அளிக்கும் புள்ளடிதான் அதற்கான ஒரே வழி. பங்களாதேஷில் 15 மணி நேர மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இங்கு இன்று எதற்காவது தட்டுப்பாடு உள்ளதா? மின்வெட்டு நடைமுறை படுத்தப்படுகின்றதா?
சஜித்தோ, அநுரவோ நாட்டை ஏற்றிருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் முற்றாகவோ அல்லது பாதியளவோ குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், அனைத்து சுமைகளையும் தாங்கி அரச ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். எனவே, ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைப்போம்” என்றார்.