பொது வேட்பாளரின் வாக்குகள் பதில் கூறும்.. முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவிப்பு.
இலங்கை தீவில் தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து ஏமாறும் அரசியல் ஏமாளிகள் அல்ல என்பதை தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வழங்கும் வாக்குகள் பதில் கூறுவதாக அமையும் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணிமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல்களில் தென் இலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்து எந்த பலனையும் அடையவில்லை.
மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியும் ஒன்றும் செய்யாத நிலையில் அதன் பின்னர் வந்தவர்களும் தமிழ் மக்கள் வாக்களித்து எந்தப் பயனையும் அடையவில்லை.
குருந்தூர் மலை வெடுக்குநாரிமலையில் தமிழ் மக்கள் தங்களுடைய அடையாளங்களுக்காக போராடிக் கொண்டிருந்த பொழுது தென் இலங்கை அரசியல்வாதிகளும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவரேனும் குரல் கொடுக்கவில்லை
மயிலத்தமடுவில் தங்கள் கால்நடைகளுக்காக தங்கள் பூர்வீக நிலத்தை கேட்டு மக்கள் போராடுகிறார்கள் எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் குரல் கொடுக்கவில்லை.
வடக்கு கிழக்கில் யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி இரண்டாயிரம் நாட்களைக் கடந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கண்டு கொள்ளவில்லை.
தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த விடயங்களை தான் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கண்டு கொள்ளவில்லை என்றாலும் பொருளாதாரத்தை மேம்படுத்த கூட எந்த ஒரு துரும்பையும் அவர்கள் அசைத்து விடவில்லை.
நாங்கள் பிரதான வேட்பாளர்களுக்கு நாங்கள் மாறி மாறி வாக்களித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் எங்களுடைய வாக்குகளை எங்களை தந்துரோபயமாக ஏமாற்றி பெற்றுக் கொண்டிருக்கும் செயற்பாடுகளே இடம்பெற்று வருகின்றன.
அதனால்தான் இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்கள் எதைக் கேட்கிறார்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை இலங்கைக்கு சர்வதேசத்துக்கும் உணர்த்துவதற்காக பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களைப் பற்றி கதைக்கவே தயாராக இல்லாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏன் மாற வேண்டும்.
ஏழு அரசியல் கட்சிகள் 80 மேற்பட்ட பொது அமைப்புகளும் ஒன்று இணைந்து இந்த தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை சங்கு சின்னத்திலே போட்டியிட வைத்திருக்கின்றோம்.
எங்களுக்கு எது தேவை என்கின்ற விடயத்தை நாங்கள் சொல்லி இருக்கின்றோம் தமிழ் மக்கள் அதனைப் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள்.