Tuesday, May 13, 2025

சஜித் வெற்றி பெறாமல் ரணில் அல்லது அநுரகுமார வெற்றியீட்டினால் என்ன நிலைமை ?

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம்.

எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எனவே அவருடன் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இருப்பினும் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறாமல் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ வெற்றியீட்டினால் என்ன நிலைமை என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகின்றது.

அது நியாயமான கேள்வி. எங்களுடைய நோக்கம் இவரோ அல்லது அவரோ வெல்லவேண்டும் என்பது அல்ல. மாறாக எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெறப்படவேண்டும் என்பதே நோக்கமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த பிரதான மூன்று வேட்பாளர்களில் ஒருவர் தான் வெற்றி பெறமுடியும். ஆனால் மற்றைய இருவரும் கூட அவர்கள் வெளிப்படையாக நாட்டுமக்களுக்குக் கூறியிருக்கும் நிலைப்பாட்டின்படி, வெற்றி பெறும் வேட்பாளர் எடுக்கும் முயற்சிக்கு எதிராக செயற்படமுடியாது.

எனவே மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். இது ‘எமது மக்களின் வாக்குகளை உங்களுக்குத் தருகிறோம்.

அதேபோன்று நீங்கள் எமது மக்களுக்குரிய தீர்வைத் தாருங்கள்’ என்ற பேரம் பேசுதலின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும்.

அதேவேளை மேற்குறிப்பிட்ட பேரம் பேசுதலின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் உச்சபட்ச வாக்குறுதி அளித்த சஜித் பிரேமதாஸவுக்கு எமது மக்களின் வாக்குகளை அளிப்பதாகக் கூறியிருக்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles