அரசாங்கம் கதிர்காம புண்ணிய பூமிக்கும் மதுபான சாலை அனுமதி பத்திரத்தையும், பியர் அனுமதி பத்திரத்தையும் வழங்கி இருக்கிறது. விரைவில் மிகிந்தலை புண்ணிய பூமியிலும், அடமஸ்தானத்திலும் சொலஸ்மஸ்தானத்திலும் மதுபான சாலைகளை திறக்கக்கூடும்.
மதுபான சாலை அனுமதி பத்திரங்களையும், வைன் ஸ்டோர்ஸ் அனுமதி பத்திரங்களையும் வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாக மாறி இருக்கின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்த உடனே இந்த அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்வோம்.
வரப்பிரசாதங்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் வழங்கப்பட்ட இந்த சந்தோசங்கள் அனைத்தையும் அகற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 63 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (16) அனுராதபுர நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது ரணிலும் அநுரவும் திருமண விருந்து சாப்பிடுகின்றனர். இந்த நாட்களில் அவர்கள் அரசியல் தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். தன்னை தோல்வியடையச் செய்வதே அவர்களுடைய டீல் ஆகும். இந்த திருட்டுத்தனமான மோசடியான டீல்களுக்கு இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.
21 ஆம் திகதி வரை அவர்களுக்கு விருப்பமான முறையில் டீல்களை செய்து கொண்டு அரசியல் தேனிலவை கொண்டாட முடியும். நாட்டு மக்கள் இவர்களின் திருட்டு டீல்களையும் தேனிலவுக் கொண்டாட்டத்தையும் நிறைவுக்கு கொண்டு வருவார்கள் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் வெற்றி பெறுகின்ற ஒரே மார்க்கம் ஐக்கிய மக்கள் சக்தி ஆகும்,
மக்களை வெற்றி பெறும் செய்வதற்கு ஒரே வழி ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதே ஆகும். அவ்வாறே வெற்றி பெற்ற பின்னர் முழு நாட்டிலும் அபிவிருத்தித் தளிர்கள் முளை விட ஆரம்பிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அறிவின் மத்திய நிலையமாக மாற்றுவோம்,
இளைஞர்களுக்கான மொழி பயிற்சிகள், கணிணி விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பக் கல்வி என்பனவற்றை வழங்கி, கல்விக்கான உரிமையையும் தொழிலுக்கான உரிமையை உறுதி செய்வோம். அறிவை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டுக்கு வழியமைப்போம். அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அபிவிருத்தியடையச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் பல சலுகைகள்,
விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரத்தை வழங்குவதோடு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும் QR Code முறையில் எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம். யானை மனித மோதலை நிறுத்துவதற்காக காணி முகாமைத்துவ திட்டமொன்றையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.