இவ்வருடம் நடத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (18) தெரிவித்தார்.
பரீட்சை தொடர்பான வினாத்தாளில் சில வினாக்கள் முன்னதாக வெளியாகியுள்ளதாகக் கூறி, இதற்காக நியாயமான நடவடிக்கையை மேற்கொள்ளக்கோரி பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்பாக நேற்று (18) காலை பெற்றோர்கள் மற்றும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த தரப்பின் குழுவொன்றுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயத்தை தெரிவித்ததாகவும் ஆணையாளர் கூறினார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியாகியதாக வந்திருந்த குழுவினர் கூறியதாகவும், ஆனால் சில ஆசிரியர்களினால் அதிக கேள்விகள் குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் உள்ளதாகவும் தெரிவித்தனர்
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்த தகவல்கள் சரியானவை என மூன்று தினங்களில் நிருபிக்கப்பட்டால் அது தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்