இறக்குவாணை டெல்வின் ஏ தோட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை (விஜயகுமார்) வீடு புகுந்து தாக்கி, அவரது வீட்டினையும் சேதம் செய்தமையானது கண்டிக்கத்தக்க செயல் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக, குறித்த தோட்ட மக்கள் தனக்கு தெரிவித்ததையடுத்து குறித்த பெரும்பாண்மை கும்பலை கைது செய்யுமாறு இறக்குவாணை பொலிஸ் பொறுப்பதிகாரி, இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பவித்ர தயாரத்ன ஆகியோருக்கு அறிவித்து உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர் இறக்குவாணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விடயத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு காவல் துறையினருக்கு அழுத்தங்களை கொடுப்பதாகவும் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.