வவுனியா நகரப் பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளைப் பெற வரிசையில் நிற்க வேண்டிய நிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளொன்றிற்கு25 பேருக்கு மட்டும் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசையில் நிற்பதாகத் தெரியவருகின்றது.
அரசாங்கம் அண்மையில் கடவுச்சீட்டுக்களைப் பெறுவதில் உள்ள தாமதங்கள் நீக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படாத காரணத்தால்,அசுத்தமான பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக வரிசையில் நிற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அப்பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் ஓடாமல் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசி வருதாகவும்,அத்துடன் அப்பகுதியில் டெங்கு நுளம்பும் பெருகிக் காணப்படுவதாகவும்,அப்பகுதியிற் காணப்படும் குப்பைகள்
தொடர்பில் வவுனியா நகரசபை, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையெனவும் கூறப்படுகின்றது .
மேலும் வயோதிபர்கள் தொடக்கம் கர்பிணித் தாய்மார்கள்,சிறுகுழந்தைகளுடனான பெற்றோர்களென இரவு பகலாக ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீதி முழுவதும் வரிசையில் அடிப்படை வசதிகளின்றி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம்(29.10) அப்பகுதிக்கு சென்ற தமிழரசுக் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர் சட்டத்தரணி டினேசன் அப்பகுதியைப் பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தற்காலிக குடிநீர் வசதியையும் வழங்கி வைத்திருந்தார்.
அதே நேரம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நாள் ஒன்றுக்கான சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும்,பணம் பெற்று டோக்கன் வழங்கும் நபர்களைத் தடுக்க வேண்டும் என்றும்,அசுத்தமாக காணப்படும் இப்பகுதியைச் சுத்தம் செய்ய நகரசபை முன்வர வேண்டும் எனவும்அவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.