போதைப் பொருள் வேண்டாம் நம் இளையோரைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு ஒன்று இன்றைய தினம் (29.04) செவ்வாய்க்கிழமை, காலை நடைபெற்றது.
மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளிடையே போதைப் பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (MSDEO) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்செயலமர்வில்
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் பசீர் முகமட் றசாக் கலந்து கொண்டு போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இச்செயலமர்வு தொடர்பாகக் கருத்து தெரிவித்த MSEDO நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,
“இந்த போதைப்பொருட்கள் எமது இளையோர் சிறுவர்கள்,குறிப்பாக பாடசாலை சமூகத்தை சீரழிக்கக் கூடிய நிலையில் பரந்து பட்டு காணப்படுவதை நாங்கள் ஊடகங்கள் மூலம் பார்க்கின்றோம்.
போதை பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்துவது,அதில் இருந்து எவ்வாறு எமது இளையோர்களை பாதுகாப்பது என்பது குறித்து நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழிப்புணர்வை இளையோர் மத்தியில் நாம் முன்னெடுத்து வருகிறோம்.
அதனுடன் தொடர்பு பட்டு கடமையாற்றுகின்றவர்களையும் உள்ளடக்கி கூட்டுக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள், திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.