அடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் நாளைய தினம் மன்னாரில் மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் வட மாகாணச் பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
நேற்று (29.04) செவ்வாய்க்கிழமை (29) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
இலங்கை ரீதியாக உள்ள தொழிலாளர்கள்,விவசாயிகள்,மீனவர்கள்,அனைவரையும் ஒன்றினைத்து மே தின நிகழ்வை முதல் முதலாக வளச் சுறண்டல் மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மன்னார் நகரில் முன்னெடுக்கவுள்ளோம்.
மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலைத் திட்டங்களினால், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் ஒட்டு மொத்தமாகப் பாதிக்கப்படுகின்றது.
அத்துடன் திட்ட மிட்ட இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறல்கள் காரணமாகவும் எமது மீனவர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியாக மன்னாரில் உள்ள வளங்களை சுரண்டுகின்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஒரு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம் பெற்று வருகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல்
கொடுப்பதற்கு,
நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மக்கள் மன்னாருக்கு வருகை தரவுள்ளனர்.
அதற்கமைய நாளை 1 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மன்னார்
பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும் மே தின ஊர்வலம் வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்து . அங்கு 3 மணியளவில் மே தின கூட்டம் இடம்பெறும் எனத் தெரிவித்தார்